லாபம்

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

சினிமாவை காதலித்த நாட்களில்...01

         இன்னிக்கு எனக்கும் சினிமாவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு! ஆனா சினிமாவை காதலித்த நாட்களில் எனக்கேற்பட்ட அனுபவ பகிர்தல்தான் இது.....

லாபம்....!

         ஏன் லாபம் என்ற வலைப்பூவை வைத்துள்ளேன் என்று யாருக்கும் யோசிக்க தோன்றும். ஆமாம்...இந்த லாபம் என்பது எல்லாமும் கிடைத்து கடைசியில் பூஜ்யமாய் முடிந்துபோற வாழ்க்கை பற்றியது.

வியாபாரத்தில் லாபம் நஷ்டம் பார்க்கலாம். ஆனால்,வாழ்க்கையில்......

இனி...,

         என்னோட ஆசை சினிமாதான் என்று நினைத்துக்கொண்டு சென்னைக்கு பயணமித்தேன். சென்னையில் தங்கிய ஆரம்பநாட்களில் எங்கு தங்குவது,யாரை பார்ப்பது, என்ற குழப்பத்தில் நின்ற எனக்கு அனுசரித்து போனது ஒரு டீக்கடை மட்டும்தான். அந்த நாட்களில் எப்படிப்பட்டதாய் எனது வாழ்க்கை இருந்தது என யோசிக்கும்போது, ஒரு நிகழ்ச்சி இப்பவும் பகீர் என்று இருக்கிறது.

வெடிப்போடிய வயல்பரப்பில் நின்று இன்னிக்காவது மழை வராதா..? என்றபடி நெற்றிப்புருவத்தின் ஓரம் கைவைத்து, அன்னாந்து பார்க்கும் கிராமத்து முதியவரைப்போல், இந்த சென்னையில் இன்னிக்காவது ஒரு சினிமாக்காரன்  நட்பு கிடைத்துவிடாதா..?என எதிர்பார்த்தபடி நான்......

         எனக்குதெரிந்த அண்ணாநகர் டீக்கடை பெரிய ஒரு பிசினஸ்சென்டர்.  அங்குதான் எனது சினிமா ஆசையைபற்றி டீக்கடை முதலாளி மூலமாய் தெரிந்துகொண்டு, சாரதி என்பவர் பழக ஆரம்பித்தார். சாரதி ஒரு மிகப்பெரிய இயக்குநரிடம் டச்சப்ஆக இருப்பதாக என்னிடம் சொன்னார். எனக்கோ மிகப்பெரிய சந்தோஷம் .சினிமாவில் சேர்ந்துவிட்டதாகவே மகிழ்ச்சியடைந்தேன்.

           அவருக்காக பணத்தையும் , போட்டிருந்த மோதிரத்தையும்  விற்று செலவுசெய்தேன். காரணம் சாரதியின் பேச்சுத்திறன்தான். எப்படியோ எனக்கு உதவி இயக்குநராக சேர்ந்துவிடவேண்டும் என்பதே குறிக்கோள். இதில் சாரதி சொன்னதிற்கெல்லாம் தலையாட்டுவதும், கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் போவதும் (வீட்டிற்கு மண்ணெண்ணய் வாங்கக்கூட...) தொழிலாகவே கொண்டிருந்தேன்.

             ஒருநாள் சாரதி வேறுஒரு நபருடன்என்னிடம் வந்தார். பிடிசி டிரைவர் என்று அவரை அறிமுகப்படுத்தினார். பெற்றகுழந்தையை பார்க்கமுடியாமல் 6மாதமாக பிரிந்து இருப்பதாக கூறினார். இருவரிடத்திலும் தண்ணிவாடை கொஞ்சம்  தூக்கலாகவே இருந்தது.

       இருவரும் ஏதேதோ புலம்பிக்கொண்டிருக்க நான் ஆர்வக்கோளாறாக நடுவில் புகுந்து, இப்போ குழந்தை எங்கே இருக்கு? என்று கேட்டேன்.

மாமியார் வீடு அடையாரில் இருப்பதாக சொன்னார்கள் .(எந்த மாமியார் வீடு என்பது...போகப்போகத்தான் புரிந்தது)

        போய்வர ஆட்டோ  செலவெல்லாம் நான் பார்த்துக்கொள்வதாக சொல்ல,உடனே கிளம்பிப்போனோம். ஆட்டோ அடையாரு சிக்னல் அருகே நின்றது.என்னிடம் 100ரூபாய் வாங்கிக்கொண்டு ஒயின்ஷாப்பிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் வரும்வரை என் நினைவெல்லாம் பிரிந்த குழந்தையும் , தகப்பனும் சேரப்போகும் அந்த காட்சியை  பார்க்கப்போகும் ஆவலில் தத்தளித்துக்கொண்டிருந்தது. இது வளரப்போகும் இயக்குநருக்கு தேவையாகவும் பட்டது.

          ஆட்டோவில் இருந்து இறங்கி குழந்தைக்காக ஒரு மில்க் பிக்கிஸ் வாங்கி வைத்துக்கொண்டேன். ஒயின்ஷாப்பில் இருந்து வெளியே வந்தவர்கள் ஆட்டோவை கட் பண்ணி அனுப்பச்சொல்லிவிட்டு இங்கேதான் இருக்கு வீடு என கையை நீட்டி ஒயின்ஷாப்பிற்கு அருகில் இருந்த மாடியை காட்டினார்கள்.

ஆட்டோ சென்றதும் கடைகளுக்கு இடையே இருந்த சிறிய படிக்கட்டு வழியாக ஏறிபோனார்கள். நானும் பின் தொடர்ந்தேன்.

        மேலே,ஆஸ்பெஸ்டாசும்  தென்னங்கீற்றும் சேர்த்துப்போட்ட குடிசை மாதிரியான ஒரு தாழ்வாரம். அதில், ஒரு வயதான பெண்மணி, ஒரு குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார்.அந்த குழந்தையை பார்த்ததும் சாரதியோடு வந்திருந்த பிடிசி டிரைவர் எப்போவ்...வ்..! என்றபடி அருகில் ஓடி தூக்கப்போக, அந்த குழந்தையோ பூச்சாண்டியை பார்த்து பயந்ததுபோல் அந்த அம்மாவை இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்டது. இவரும் விடுவதாக இல்லை. குழந்தையின் கையைப்பபிடித்து பலவந்தமாக தூக்க,அந்த அம்மா அப்படியே விட்டுவிட்டு வெளியே போய்விட்டார்.(அந்த அம்மாதான் அவருடைய மாமியார் என பிறகுதான் நான் தெரிந்துகொண்டேன்) குழந்தை அவரின் பிடியில் அலறியபடி திமிறிகொண்டிருந்த்து.

       இதன் நடுவே சாரதியோ ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு, எங்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா, அமைச்சரை வைச்சு பேசி தீர்த்திருக்கலாம். என ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்க,எனக்கு அதைப்பற்றி சிந்திக்க தெரியவில்லை. தேவையுமில்லை.

       நான் வாங்கிவைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை குழந்தையிடம் கொடுத்தபடி, அழாதே அப்பாதானே....என கெஞ்சினேன். குழந்தை அழகையை நிறுத்துவதாக இல்லை. அதேநேரம் டக்...டக்..என்ற கட்டையின் சத்தமும்,அதைத்தொடர்ந்து பூட்ஸ் காலடி சத்தமும் கேட்க திரும்பிப்பார்த்தேன்.

     நான்கு போலீஸ்காரரகள் லத்தியோடு வர ...அவர்களுக்குப்பின்னால், அந்த வயதான பெண்ணும் பின்தொடர்ந்து வந்து, அதோ நிக்கிறானே அந்தப்பாவிதான் ...ஐயா..! என்று கோபமாக சுட்டிகாட்டியபடி முடியை சுருட்டி ஆவேசமாக கொண்டை போட்டுக்கொண்டிருந்தாள். எனக்கோ எந்த எழவும் புரியவில்லை. என்ன நடக்கிறது....? என்ன நடந்தது.....? என்ன நடக்கப்போகிறது.......? பேயறைந்த முகத்தோடு நான்.........!!!

                                                                                                    தொடரும்........    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு