லாபம்

திங்கள், 12 ஜனவரி, 2009

சினிமாவை காதலித்த நாட்களில்....02

லத்தியோடு நின்றிருந்த நான்கு போலீஸ்காரர்கள், நீதான் நவநீதனா? என்று கேட்டபடியே டிரைவரை நோக்கி வேகமாக போனார். லத்தியால் அவரை அடித்து அவரின் காலரை பிடித்து இழுத்தபடியே எங்களை பார்த்து,நீங்கள்லாம் யாருடா? ரவுடியா? எவ்வளவு பணம் கொடுத்தான் உங்களுக்கு ? குழந்தையை தூக்கிட்டுப்போய் என்ன பண்ணலாம்ன்னு திட்டம்போட்டீங்க? பொண்டாட்டிய  மண்ணெண்ண ஊத்தி எரிச்சமாதிரி  குழந்தையையும் எரிக்கப்பாத்தீங்களா?  அந்த போலீஸ்காரர் கேட்க கேட்க என் நெஞ்சுக்குள் பகீர் என  தீப்பற்றி ஒரு நெருப்புபந்து கிளம்பியதுபோல் இருந்தது. உடல் தடதடவென நடுங்க ஆரம்பித்தது.

 இப்படிப்பட்ட நிகழ்வு இந்த உணர்வு எதையும் நான் இதுவரை அனுபவித்ததில்லை. பிடிசி டிரைவருக்கும் அவரின் மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டு இருவரும்  பிரிந்து வாழ்ந்ததையோ அந்த பிரச்னையால் அவரது மனைவி தீயில் கருகி இறந்ததை பற்றியோ  எதுவும் தெரியாமல் மொட்டையன் குட்டையில் விழுந்தது மாதிரி மாட்டிக்கொண்டேன்.

என்  மண்டைக்குள்  சரக்சரக்கென பலபல மின்னல் வெட்டுக்கள் பாய்ந்தமாதிரி நிலை தடுமாறி பேந்தபேந்த  விழித்தேன். என் பார்வையை கண்ணீர் மறைத்த்து. 

இனி என் வாழ்க்கை என்னவாகப்போகிறது என நினைக்க நினைக்க ஒரு ஆட்டோவில் எங்களை ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

எங்களை பல போலீஸ்கார்ரகள் அலட்சியமாய் பார்த்தபடி ,இவனுங்கதானா ?’ என முதுகில் ஒரு தட்டுதட்டிவிட்டு போனார்கள் .அதேபோல் வேறுவிஷயமாய் வருவோரும் போவோரும் கேவலமாய் பார்த்துவிட்டு சென்றார்கள். மிகப்பெரிய கொடுஞ்செயலை செய்துவிட்டோம் அல்லது சம்மந்தபட்டுவிட்டோம் என நினைக்கத்தோன்றியது.

வரிசையாக நிற்க வைத்த எங்களை ஒரு போலீஸ்கார லத்தியால்  அடித்தபடி சட்டையையும் பேண்ட்டையும் கழட்டச்சொன்னார். சாரதியும் அவனது நண்பரும் சரசரவென கழற்றினார்கள். எனக்கு கழற்ற முடியவில்லை. மனம் வரவில்லை. அதற்காகவே  மேலும் இரண்டு அடிதான் கிடைத்தது. வேறி வழியில்லாமல் கூனி குறுகியபடி கழற்றினேன்.

ஒரு போலீஸ்காரர் ஒவ்வொருத்தராய் வாயை ஊதச்சொன்னார். என் முறை வந்ததும் நீ என்ன தண்ணி அடிக்கலையா? எனக்கேட்டதும் எனக்காக முந்திக்கொண்டு சாரதி சொன்னான்,'அவர் தண்ணி.. தம் எதும் அடிக்கமாட்டார் சார்... நல்லவர் சார்..!'

'ஓ... நல்லவனா... அப்படின்னா இவனுங்க கூட எதுக்குடா சேர்ந்த..?' என்று மீண்டும் என்னை அடிக்க ஆரம்பித்தார் முகப்பரு போலீஸ்காரர்.  அதற்குள் கழற்றிப்போட்ட  எங்களின் பேண்ட்களையும் சட்டைகளையும செக் பண்ணிய போலீஸ்காரர்,' இது என்னடா.? டைரக்டர் பாக்யராஜ்ன்னு எழுதியிருக்கு?' என ஒரு சீட்டை எடுத்து காட்டிக்கேட்க ,'நான்தான் சார் எழுதினேன்' என அத்தனை வலியிலும் வேதனையிலும் சந்தோஷமாகவும் ,கம்பீரமாகவும் சொன்னேன்.

ஆமாம்...எப்படி தனக்குஒரு காதலியின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி காதலன் சந்தோஷப்படுவானோ, அதேமாதிரி எனக்கு பிடித்த டைரக்டர் பாக்யராஜ்  அவர்களின் பெயரை நான் எழுதிப்பார்த்த சீட்டுதான்அது.

'அவர் பெயரை எதுக்குடா எழுதிவைச்சிருக்க நீ? 'என மிரட்டலாக  போலீஸ்காரர் கேட்க ,'சார் நான் அவருகிட்டேதான் சார் அசிஸ்டண்ட் டைரக்டராக டிரை  பண்ணறேன். சேர்த்துக்கொள்வதா சொல்லியிருக்கிறார் சார்'. என கொஞ்சம் உயிர் வந்த  சந்தோஷத்தில் சொன்னேன். அதுதான் தாமதம் 'ஓ ....சினிமாக்காரனா..? நீங்கதான்  போலீஸ்காரங்களை கேவலப்படுத்தி படமெடுக்கிறதா?'என மீண்டும் எனை அர்ச்சனை செய்ய  துவங்கினார். ஆனால், இந்தமுறை லத்தியின் அடியால் கொஞ்சம் பெருமைப்படதான் முடிந்தது. காரணம் நான் சினிமாக்காரன் என பட்டம் கொடுத்து அடித்ததுதான்.

போட்டிருந்த ஜட்டியோடு லாக்கப்பில் தள்ளி கதவை  சாத்தினார்கள். நேரம் செல்ல செல்ல இருட்டத்தொடங்கியது. எனது மனசும் கூட.....

நான் சினிமா ஆசையால் கனவுதொழிற்சாலையை நோக்கி சென்னைக்கு  வருவதற்குமுன் எனக்கு கிடைத்த வேலை ஒரு தொழிற்சாலையில்தான்.

கடலூரில் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் ஆர்ட்ஸ்  காலேஜில் ஜூவாலஜி மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். (அரியர்ஸ் இருந்தது என்பது வேறு விஷயம்) எனக்காக என் அண்ணன் வேலைக்காக அப்ளிகேஷன் போட்டதில் ஆஸ்வாலிக் கெமிக்கல் பேக்டரியில்(ஓ.டி) இன்டர்வியூ அட்டெண்ட் செய்தேன். மொத்தம் 68பேர் கலந்துகொண்டதில் இரண்டுபேர் செலக்ட் ஆனதாக பிறகு தெரிந்துகொண்டேன். அதில் நானும் ஒருவன்.

அண்ணனுக்கோ அளவற்ற மகிழ்ச்சி. சூப்பர்வைசர் வேலை எனக்கு  கிடைத்திருப்பதாக உணர்த்தினார். எனக்கோ அவர் சொல்வதை காதில் வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. எனது வாழ்க்கை அதுவல்ல. நான் வேறு ஒரு உலகத்திற்கு போகப்போகிறேன் . அது திரைஉலகம்தான் என நினைத்து அன்று இரவே வீட்டில் யாரிடமும்  சொல்லிக்கொள்ளாமல்  ஓடிவந்தவன்தான் நான்.

ஆனால்..இன்று....

 யாரோ ஒருவனுக்காக எந்த உள் விவகாரங்களையும் கேட்டறியாமல் சொன்னதிற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் போய்க்கொண்டிருந்ததால் பொறியில் மாட்டிக்கொண்டேன். இனி சென்ட்ரல் ஜெயிலில் என்னை அடைத்துவிடுவார்கள் . பத்திரிகையில் போட்டோ போட்டு  கொலைகாரர்கள் என்று கொட்டை எழுத்தில் வரும் .

ஊரில் அப்பாவுக்கு இருந்த மரியாதை குறைந்துவிடும். அண்ணனுக்கு என்னால் தலை குனிவு ஏற்படும் . மூன்று அக்காக்களின் கணவர்கள் அக்காக்க்களை பார்த்து  செய்திதாளை காட்டி காறித்துப்புவார்கள்.

 இப்படியெல்லாம் நினைக்க நினைக்க தொண்டையை ஏதோ அடைப்பதுபோல் இருந்தது. கண்ணீர் கொட்டத்தொடங்கியது.

வேண்டாம் இந்த வாழ்க்கை எப்படியாவது செத்துவிடவேண்டும். நான் உயிரோடு இருக்கக்கூடாது...அதற்கு என்ன வழி...என்ன பண்ணவேண்டும்....திடீர் என பொறி தட்டியது....

 

                                                                                         .....தொடரும்....

3 கருத்துகள்:

15 ஜனவரி, 2009 அன்று 4:51 PM க்கு, Blogger கோவி.கண்ணன் கூறியது…

வெற்றிப் பயணத்தின் வலிகள் ... நன்றாக எழுதப்பட்டு இருக்கிறது

 
18 ஜனவரி, 2009 அன்று 1:06 AM க்கு, Blogger பாரதிவாசகன் கூறியது…

நன்றி கண்ணன் சார்..இந்த வலிகள் இன்னும் இருக்கிறது....,உங்களோடு பகிர்ந்துகொண்டதில் சந்தோஷம்தான்.மேலும் எதிர்பார்க்கிறேன்.

 
21 ஜனவரி, 2009 அன்று 11:50 PM க்கு, Blogger தமிழ். சரவணன் கூறியது…

தங்கள் வலிகளை உணரந்தவன்...

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு